ஹைதராபாத் அருகே பயங்கர மோதல்... என்கவுண்டரில் பிரபல "கேங்ஸ்டர்" சுட்டுக் கொலை.. போலீஸ் அதிரடி!
ஹைதராபாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் ஹைதராபாத் அருகே தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கு பதுங்கியிருந்தது நக்சலைட்டாக இருந்து, ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் மற்றும் கூட்டாளிகள் என தெரியவந்தது.
போலீசாரை அந்த கும்பல் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது போலீசார் பதில் தாக்குதல் நடத்தி நயீம் மற்றும் அவனது கூட்டாளியை கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
தெலங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், சாத்நகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அங்கு சோதனை நடத்திவந்தனர்.
ஹைதராபாத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில்தான் இந்த பகுதியிருப்பதால் பரபரப்பு நிலவியது. பிரதமர் மோடி, நேற்று தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய நிலையில், தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருந்ததாக வெளியான தகவலால் கூடுதல் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், அங்கு பதுங்கியிருந்தது முன்னாள் நக்சலைட் தீவிரவாதியும், கடந்த 15 வருடங்களாக ரவுடி கும்பல் நடத்தி வந்த கேங்ஸ்டருமான நயீம் என்பது ஊடகங்களுக்கு பின்னர்தான் தெரியவந்தது. நயீம் கும்பல், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் போலீசார் பதிலடி கொடுத்து நயீமையும் அவனது கூட்டாளி ஒருவனையும் சுட்டு கொன்றனர்.