50 வயதுக்குட்பட்ட பெண்களில் முதல்முறையாக சுவாமி தரிசனம் செய்து சாதனை.. 2-ஆவது முயற்சியில் வெற்றி!
Recommended Video
சபரிமலை: 50 வயதுக்குட்பட்ட பெண்கள் முதல்முறையாக சுவாமி தரிசனம் செய்து இரு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனைத்து வயதுடைய பெண்களையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஐப்பசி மாதம் நடைத்திறப்பின் போது சுவாமி தரிசனம் செய்ய பெண்கள் குவிந்தனர். எனினும் இந்து அமைப்புகள், பாஜகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
144 தடை உத்தரவு
சபரிமலை வரும் பெண்களை உரிய பாதுகாப்போடு போலீஸார் அழைத்து சென்றாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் முன்னேறி சன்னிதானத்தை அடைய முடியவில்லை. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இரு பெண்கள்
இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்குள் இன்று அதிகாலை இரு பெண்கள் நுழைந்து சுவாமி தரிசன்ம செய்தனர். மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள்
சுமார் 3.45 மணியளவில் அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் கடந்த மாதம் 24-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
திரும்பி சென்ற பெண்கள்
அப்போது அவர்கள் இருவரும் சபரிமலை கோயிலுக்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ள அப்பாச்சிமேடு பகுதியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களுடன் போலீஸார் சென்றும் போராட்டக்காரர்கள் அவர்களை விடவில்லை. மாறாக கீழே சென்று சுவாமி சரணம் ஐயப்பா சொல்லிவிட்டு கிளம்புமாறு கூறிவிட்டனர். இதையடுத்து இருவரும் திரும்பி சென்றனர்.
பெண்கள் போராட்டம்
இந்த நிலையில் இரண்டாவது முயற்சியாக நேற்று இரவு சபரிமலைக்கு வந்த பிந்துவும் கனகதுர்காவும் சன்னிதானம் வரை சென்று ஐயனை தரிசனம் செய்து சாதனை படைத்துவிட்டனர். சபரிமலைக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறி கேரளாவில் பெண்களின் சுவர் போராட்டம் 620 கி.மீ வரை கைகளை இணைந்து கொண்டு பெண்கள் மனிதசங்கிலி போல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.