பெண் பயணியை முத்தமிட பாய்ந்த உபேர் டாக்சி டிரைவர்: டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவர் பெண் பயணியை முத்தமிட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் சிவ் குமார் யாதவ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படி இருந்தும் டெல்லியில் உபேர் டாக்சிகள் ஓடத் தான் செய்கின்றன.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரை உபேர் டாக்சி டிரைவர் முத்தமிட முயன்றது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரர் ஃபேஸ்புக்கில் கடந்த 30ம் தேதி தெரிவித்துள்ளார். அந்த பெண் டெல்லியில் இருந்து குர்காவ்ன் சென்றுள்ளார்.
அந்த பெண்ணின் சகோதரர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உபேர் நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது,
என் சகோதரி கடந்த மாதம் உங்கள் நிறுவன டாக்சியை எடுத்துள்ளார். டிரைவர் வினோத் என் சகோதரியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார். இது குறித்து உபேர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் பயனில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு உபேர் நிறுவனம் பதில் அளித்திருப்பதாவது, அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகறோம். இது போன்ற குற்றங்களை எங்கள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் டிரைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.