Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு: போர் பதற்றத்தால் 100 டாலருக்கும் மேல் எகிறிய எண்ணெய் விலை

Subscribe to Oneindia Tamil

யுக்ரேன் படையெடுப்பு
Getty Images
யுக்ரேன் படையெடுப்பு
Click here to see the BBC interactive

மாஸ்கோ நேரப்படி, இன்று அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் புதின் ராணுவ தாக்குதலை அறிவித்தார். இது நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் தொடங்கியவுடன் தலைநகர் கீவ்வில், அவசரக் கால சைரன் ஒலிக்கப்பட்டது. போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, மக்கள் நகரத்தை விட்டு வெளியேறும் போது கார்களின் வரிசை விரைவுச் சாலையை அடைத்திருப்பதைப் படங்கள் காட்டின.

கீவ்வில் உள்ள கார்டியன் செய்தியாளர் லூக் ஹார்டிங் ட்விட்டரில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்பதாகக் கூறியுள்ளார்.

புதின் கூறியது என்ன?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "நீதியும் உண்மையும்" ரஷ்யாவின் பக்கம் இருப்பதாகக் கூறினார். அதோடு, ரஷ்யாவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால், அதற்கு மாஸ்கோ உடனடியாக பதிலளிக்கும் என்று எச்சரித்தார்.

மேலும், யுக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான மோதல் "தவிர்க்க முடியாதது" என்று கூறிய புதின், தனது நாட்டின் நடவடிக்கைகள், தற்காப்பு சார்ந்தது என்றும் அவர்கள் நவ நாஜிக்களுக்கு உதவுவதற்காக, அவர்களுடைய அப்பாக்களும் தாத்தாக்களும் சண்டையிடவில்லை என்று யுக்ரேனின் ராணுவத்திற்கும் கூறினார்.

இன்று காலை ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேனை "ஆக்கிரமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை," என்று கூறினார்.

அதேநேரம், "சிறப்பு ராணுவ நடவடிக்கையை," அறிவித்தவர், யுக்ரேனிய மக்கள் நாட்டை ஆட்சி செய்பவர்களைச் "சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க" முடியும் என்று கூறினார்.

அதோடு, மேற்கு நாடுகளுக்கு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறியவர் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதையும் நினைவூட்டி அச்சுறுத்தல் விடுத்தார்.

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோ பைடன்

இதைத் தொடர்ந்து, யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவரிடம் பேசியதாகவும் சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஓர் அறிக்கையில், பைடன் இந்தத் தாக்குதலை நியாயமற்றது எனக் கண்டித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

அதிபர் புதினின் முழு வீச்சிலான படையெடுப்ப்பிற்கு எதிராகத் தெளிவாகப் பேசவும் யுக்ரேன் மக்களுடன் நிற்கவும் உலகத் தலைவர்களை அழைக்குமாறு ஜெலன்ஸ்கி தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் பைடன் கூறினார்.

அதோடு, வியாழக்கிழமை அன்று, ஜி7 தலைவர்களைச் சந்திப்பதாகவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் "ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும்" என்றும் கூறியவர், "யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்," என்று கூறினார்.

ஐ.நா-வின் துணைச் செயலாளர், ராணுவ விரிவாக்கம் "ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு, துன்பம் மற்றும் அழிவுக்கு," வித்திடும் என்று எச்சரித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், "அமைதிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்," என்று அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள்

பிபிசி கீஃப் செய்தியாளர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ், "இதுவரை ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் விவரங்களை யுக்ரேன் அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை கீஃப் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் நாட்டின் தெற்கே உள்ள ஒடெஸ்ஸாவில் படைகளின் நகர்வு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறுகிறார்.

ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் துருப்புகள் எல்லையைக் கடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறுகிறார்.

சாட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இது மிகப்பெரிய அளவிலான படையெடுப்பு," என வாட்டர்ஹவுஸ் கூறுகிறார்.

யுக்ரேன் படையெடுப்பு
Getty Images
யுக்ரேன் படையெடுப்பு

சில ஏவுகணை தாக்குதல்கள் யுக்ரேனின் ராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் தலைநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தைத் தாக்கியதாக யுக்ரேனின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் யுக்ரேனிய நகரங்களைத் தாக்குவதை மறுத்துள்ளது. அது ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் விமானப் படைகளை, "உயர் துல்லியமான ஆயுதங்களுடன்" குறி வைப்பதாகக் கூறியுள்ளது.

யுக்ரேனிய ஆயுதப் படைகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தலைநகருக்கு அருகேயுள்ள போரிஸ்பில் விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

அதோடு, ரஷ்யாவின் இந்த வான் வழித் தாக்குதலை முறியடிக்க யுக்ரேன் விமானப் படை போராடி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக யுக்ரேனிய காவல்துறை தெரிவித்துள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

யுக்ரேன் படையெடுப்பு
Getty Images
யுக்ரேன் படையெடுப்பு

ஒடெஸ்ஸாவுக்கு அருகேயுள்ள பாடில்ஸ்க்கில் அமைந்திருக்கும் ராணுவப் பிரிவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒருவர் காயமடைந்ததாகவும் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மரிபோல் நகரத்தில் ஒருவர் இறந்துள்ளதாகவும் 19 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.

"அமைதியாக இருங்கள். யுக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்" என, யுக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேல் உயர்வு

யுக்ரேன் பதற்றம் அதிகரித்து வருவதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.

அதிபர் புதின் கிழக்கு யுக்ரேனில், ராணுவ தாக்குதலைத் தொடங்கிய பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் 2 முதல் 3% வரை குறையவும் இந்தத் தாக்குதல் காரணமாக அமைந்தது.

யுக்ரேன் படையெடுப்பு
Getty Images
யுக்ரேன் படையெடுப்பு

யுக்ரேனில் உள்ள 20,000 இந்தியர்கள்

ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்த நிலையில், 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை இரவு யுக்ரேனில் அவசரக் கூட்டத்தை நடத்தியது.

அப்போது, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பதற்றங்களை உடனடியாகத் தணிக்க இந்தியா அழைத்து விடுத்தது. மேலும் கிழக்கு யுக்ரேனில் "ராணுவ நடவடிகை" தொடங்குவதற்கான தனது முடிவை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தது, ஒரு பெரிய நெருக்கடிக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எச்சரித்தது.

நிலைமையை மோசமாக்குவதில் பங்களிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகத் தணிக்கவும் தவிர்க்கவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர்கள் உட்பட, 20,000 இந்தியக் குடிமக்கள் யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+