சுப்ரீம்கோர்ட் குட்டு- அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெற கேபினட் பரிந்துரை?
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதற்காக மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த களேபரங்களுக்குப் பின்னர் 26 எம்.எல்.ஏக்கள் தான் முதல்வர் நபம் துகியை ஆதரித்தனர்.

ஜனாதிபதி
அதே நேரத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 34 ஆனது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது. இதனை ஏற்று கடந்த மாதம் 25-ந் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் சாட்டையடி
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

முந்திக் கொள்ளும் மத்திய அரசு
இவ்வழக்கில் ஜனாதிபதி ஆட்சியை உச்சநீதிமன்றமே ரத்து செய்து உத்தரவிடலாம் என்கிற சூழல் இருந்து வருகிறது. இதனால் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி தலைவரான கைல்கோ பைவுல்லை புதிய முதல்வராக்கி ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசே ரத்து செய்யலாம் எனக் கூறப்பட்டது.
அதாவது உச்சநீதிமன்றம் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தால் மத்திய அரசுக்கு மேலும் கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால் முந்திக் கொண்டு தாமே ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யலாம் என மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

அமைச்சரவை பரிந்துரை
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பைவுல் தலைமையில் 31 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்து அடுத்த அரசு அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதற்கான பரிந்துரையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவையின் இப்பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தால் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட புதிய அரசு அங்கு அமைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் கொடுக்கப் போகும் மரண அடியிலிருந்து மத்திய அரசு தப்பித்ததாகவும் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications