மக்கள் தீர்ப்பை பாஜக மதித்து ஜம்மு காஷ்மீர் அரசுக்கு இனி குடைச்சல் தரக் கூடாது: மெகபூபா முப்தி
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கி விட்டனர்; ஜம்மு காஷ்மீரில் அமைய இருக்கும் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் அரசுக்கு இனியும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இடையூறு செய்யாமல் முழுமையாகவும் சுதந்திரமாகவும் இயங்கவிட வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தல் நடத்தப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தற்போது வரை 81 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சி 38 இடங்களில் வென்றுள்ளது. 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா தோல்வியைத் தழுவினார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது: தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமைக்கு எனது வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீரில் நிலையான அரசு அமைய, தொங்கு சட்டசபையை உருவாக்காமல் வாக்களித்த மக்களுக்கும் நன்றி. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரும் துயரை
எதிர்கொண்டனர். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிலையான அரசு அவசியம். புதிய ஆட்சியும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வை உருவாக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் அளித்த தீர்ப்பை மத்தியில் ஆளும் பாஜக அரசு மதித்து நடக்க வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்காமல் குழப்பத்தை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இடையூறு செய்யாமல் சுதந்திரமாக செயல்படவும் மத்திய பாஜக அரசு அனுமதிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பில் இருந்து மத்திய பாஜக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications