மாயாவதியை மோசமான வார்த்தையால் விமர்சித்த தயா சங்கர் பதவி பறிப்பு.. உ.பி. பாஜக அதிரடி!
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய உ.பி. பாஜக துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கின் பதவியைப் பறித்து கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வார்த்தை மோதல்களை ஆரம்பித்துவிட்டனர். உத்தரப்பிரதேச மாநில துணைத் தலைவர் தயா சங்கர் சிங், ஒரு படி மேலே சென்று, மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை கடுமையாக விமர்சித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு மாயாவதி சீட்டை விற்பனை செய்து வருகிறார். இவரே ஒரு பெரிய தலைவர், மூன்று முறை முதல் மந்திரியாக இருந்தவர்... ஆனால் மாநிலத்தில் போட்டியிடுபவர்களுக்கு சீட்டை விற்பனை செய்து வருகிறார் ரூபாய் ஒரு கோடிக்கு.
பிற்பகலில் யாராவது ரூ. 2 கோடி வழங்கினால் அவருக்கு சீட் கொடுக்கப்படும். அதே மாலையில் ஒருவர் ரூ. 3 கோடி வழங்கினால் முன்னாள் வந்தவரை தள்ளிவிட்டு அவருக்கு சீட் கொடுப்பார். 'விலைமகளைவிட மிகவும் மோசமானவர் மாயாவதி'' என்று கடுமையாக விமர்சித்து கூறியதோடு கன்சிராமின் கொள்கைகளை விற்றுவிட்டார் மாயாவதி என்று பேசியதுதான் இப்போதைய பதவிப் பறிப்புக்குக் காரணமாகியுள்ளது.
இதனையடுத்து இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கேட்டது. இதனிடையே உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர் கேஷவ் மவுரியா இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தயா சங்கர் சிங் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கையும் நாகரிகமும் தேவை என்று பாஜக-வினருக்கு கட்சி மேலிடம் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.