உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக அமைச்சர் விஜய் காஷ்யப் நேற்று உயிரிழந்தார். இதுவரை உத்தரப் பிரதேசத்தில் 5 பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொரோனா 2ஆம் அலையால் இந்தாண்டு வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டில் பல பகுதிகளில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக அமைச்சர் விஜய் காஷ்யப் நேற்று உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 5 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 307 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல சமாஜ்வாடி கட்சிக்கு 49 உறுப்பினர்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 உறுப்பினர்களும் உள்ளனர்,