14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து செங்கல் சூளையில் எரித்த கொடூரம்
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் செங்கல் சூளையில் எரிந்த நிலையில் கிடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்து விட்டு விபத்து போல சித்தரித்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூலித்தொழில் செய்தாலும் சந்தோசமாகவே நகர்ந்தது அவர்களின் வாழ்க்கை. செங்கல் சூளையில் வேலை செய்த அந்த தொழிலாளிக்கு மனைவி, மகன், மகள் என மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்தன. வெள்ளிக்கிழமையன்று மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறவே, அருகில் உள்ள கிராமத்தின் மருத்துவமனைக்கு போய் திரும்புவதற்குள் மகள் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தாள்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் முசாபர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். நடந்தது விபத்தாக இருந்தால் மகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது பெற்றோரின் வாதம். புகாரை பதிவு செய்த போலீசார் செங்கல் சூளை அதிபர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
என் மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை அதற்கான காரணமும் எதுவும் இல்லை என்று கூறும் பெற்றோர், மின்வசதி இல்லாத அந்த அறையில் தீப்பிடிக்கவும் வாய்ப்பு இல்லை என்று கண்ணீர் மல்க போலீசில் கூறினர். விபத்து போல செட்டப் செய்துள்ளனர். துணிகளைப் போட்டு எரித்துள்ளனர் என்றும் கூறினர். மகளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளதாகவும், குற்றவாளிகளை காவல்துறையினர் தப்ப வைக்க முயற்சி செய்வதாகவும் கூறினர்.
சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி தீக்காயத்தினாலும் மூச்சுத்திணறல் காரணமாகவும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு முறையாக விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளைத் தப்பவைக்க முயற்சி செய்வதாகவும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications