''அந்த'' வழக்குகளை விசாரித்த போலீஸ்.. உ.பி இன்ஸ்பெக்டரை பசு காவலர்கள் திட்டமிட்டு கொன்றனரா?
உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசு இறைச்சி காரணமாக பெரிய கலவரம் நடந்தது. பசுக்காவலர்கள் நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அவர் மோசமாக தாக்கப்பட்டு, கல்லால் அடிக்கப்பட்டு பின் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 பசுக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரித்து வந்தவர்
இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் மீரட்டை சேர்ந்தவர். இவர்தான் 2015ல் பசு பெயரால் நடந்த கொலையை விசாரித்து வந்தார். 2015ல் உ.பி பிசாந்தா கிராமத்தில் முகமது அஃலா என்ற நபர் பசு கறி சாப்பிட்டதாக பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதான் உ.பியை உலுக்கிய மிகப்பெரிய பசுக்கொலை ஆகும். இதைத்தான் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் விசாரித்து வந்தார்.

முக்கிய ஆதாரங்கள்
இவர் இந்த கொலையில் சில ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தார். அதை தொடர்ந்து இந்த கொலைக்கு எதிராக நிறைய ஆதாரங்களை திரட்டினார். கொலையை யார் செய்தது என்று தொடர்ச்சியாக ஆதாரங்களை இவர் கண்டுபிடித்து வழக்கை துரிதமாக நடத்தி வந்தார். இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு பெரிய கோபத்தை வரவழைத்ததாக கூறப்படுகிறது.

நிறைய குற்றச்சாட்டு
அவர் இஸ்லாமியர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதேபோல், அவர் இந்த வழக்கில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்கிறார்கள். இதனால் அவர் மீது சிவசேனா, பஜ்ரங் தல், ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மாற்றப்பட்டார்
இவர் விசாரணையில் குற்றவாளியை நெருங்கியதை அடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விசாரணையும் வேறு அதிகாரிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இவர் வாரணாசிக்கு உடனடியாக மாற்றப்பட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும் சந்தேகம்
இந்த நிலையில்தான் இவர் உத்தர பிரதேச கலவரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இவரை குறி வைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலாக இது இருக்க வாய்ப்பு இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். ஆனால் சிலருக்கு பயந்து யாரும் வெளிப்படையாக இதுகுறித்து அவர்கள் வெளியே பேசுவதில்லை.












Click it and Unblock the Notifications