அமெரிக்க அமைச்சரின் இந்திய வருகை ஒத்திவைப்பு - அணுசக்தி பேச்சுகள் முடக்கம்!
டெல்லி: இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் தொடர்பாக இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் எர்னஸ்ட் மோனிஸ் தனது இந்தியப் பயணத்தை திடீரென்று ரத்து செய்துவிட்டார்.
தேவயானி விவகாரம் இந்திய-அமெரிக்க உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சலுகைகளை மத்திய அரசு பறித்தது.
இந்நிலையில், அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் எர்னஸ்ட் மோனிஸ் அடுத்த வாரம் மேற்கொள்ளவிருந்த தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் மோனிஸ் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுப்பயணம் தாமதமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
மோனிஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவுக்கும் இந்தியக் குழுவுக்கும் இடையே நடைபெறும் எரிசக்திப் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளிடையே எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவுக்கு அமெரிக்க எரிவாயு ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மோனிஸின் இந்திய சுற்றுப்பயணத்துக்கான தேதி இரு தரப்புக்கும் வசதியானபடி மாற்றியமைக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இம்மாதம் 6ந் தேதி மேற்கொள்ளவிருந்த இந்தியப் பயணத்தை ஒத்திவைத்துள்ள நிலையில், எரிசக்தித் துறை அமைச்சர் எர்னஸ்ட் மோனிஸின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications