டிரம்ப் வரி! உ.பி. கம்பளி சிட்டி காலி! 13 லட்சம் வேலை பறிப்பு? சென்னைக்கு தொழிலாளர்கள் குடிபெயர்வு?
ஜெய்ப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்ததன் காரணமாக, இந்திய கார்பெட் (கம்பளம்) தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில் 25% ஆக இருந்த இந்த வரி, இப்போது 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும். மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள்.

ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நெருக்கடி
உலக அளவில், கையால் தயாரிக்கப்படும் இந்திய கம்பளங்களுக்கு தனி இடம் உண்டு. இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கம்பளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் 60% அமெரிக்காவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது கிராமப்புற தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
காஷ்மீர், ஜெய்ப்பூர், பானிபட், ஆக்ரா, வாரணாசி, மிர்சாபூர், மற்றும் பதோஹி போன்ற நகரங்களில் இருந்து தயாரிக்கப்படும் கம்பளங்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. மொத்த ஏற்றுமதியில் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பதோஹி பகுதியின் பங்களிப்பு மட்டும் 60% என கூறப்படுகிறது. எனவே இது கார்பெட் சிட்டி என்றே அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த புதிய வரிவிதிப்பால், இந்திய கம்பளங்களின் விலை அமெரிக்க சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்திய கம்பளங்களை வாங்குவதை குறைத்துவிட்டனர்.

நஷ்டத்தை சரிகட்ட முயற்சி
சில அமெரிக்க இறக்குமதியாளர்கள், தங்கள் நஷ்டத்தை இந்திய ஏற்றுமதியாளர்களிடம் இருந்து சரிகட்ட முயற்சிக்கின்றனர். இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் குடோன்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் இந்த வரிவிதிப்பு 50% ஆக உயர்த்தப்பட்டதால், இந்தத் தொழில் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
அரசிடம் கோரிக்கை
கார்பெட் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் உறுப்பினரான அஸ்லம் மெஹபூப் கூறுகையில், "இந்த வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் குறைவான வரியுடன் அமெரிக்காவிற்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்ய முடியும். இது நம் போட்டியாளர்களுக்கு சாதகமாக அமையும்" என்றார்.
எனவே, இந்தத் தொழிலை காப்பாற்ற அரசு 50% வரியை ஈடு செய்யும் விதமாக ஒரு நிதி உதவியை வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சலுகை திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கவுன்சிலின் மற்றொரு உறுப்பினரான சஞ்சய் குப்தா கூறுகையில், "அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தத் தொழில் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. விவசாயம் செய்யும் மக்கள் கூட இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நிதி நெருக்கடியை சந்திக்காமல் இருக்க, அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்" என்றார்.
சஞ்சய் குப்தா மேலும் கூறுகையில், "அமெரிக்கா விதித்த இந்த வரி நியாயமற்றது. இது நேரடியாக கம்பளத் தொழிலையும், நெசவாளர்களையும் பாதிக்கிறது. சுமார் 25-30 லட்சம் கிராமப்புற மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 13 லட்சம் பேர் நேரடியாக அமெரிக்க சந்தையை நம்பி வாழ்கின்றனர். 17,000 கோடி ரூபாய் ஏற்றுமதி என்பது அரசுக்கு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதால் இது மிக முக்கியமான தொழில்" என்றார்.

குடிபெயரும் அபாயம்
அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்தால், அவர்கள் வேலை தேடி மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அங்கு அவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என சஞ்சய் குப்தா கவலை தெரிவித்தார். இந்தியாவில் விதிக்கப்பட்ட அதிக வரியால், சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் பலன் பெறும் என அஸ்லம் மெஹபூப் கூறினார்.
கார்பெட் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், "அமெரிக்க இறக்குமதியாளர்கள், இந்திய கம்பளங்களின் விலையை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த முடியாது என்கின்றனர். இதனால், எங்களது குடோன்களில் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. மேலும், வங்கிக் கடன் வட்டி, தொழிலாளர் சம்பளம் போன்ற செலவுகளும் எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது" என்றனர்.
"இந்தத் தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆண்டு 17,640 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் 60% அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ரத்து செய்துவிட்டனர். புதிய உற்பத்தி தொடங்கப்படவில்லை. அனைத்தும் முடங்கியுள்ளன" என்று அஸ்லம் மெஹபூப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "500 ஆண்டுகள் பழமையான இந்தத் தொழில் இந்தியாவின் பாரம்பரியம். இது இப்போது ஆபத்தில் உள்ளது. எனவே, அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தொழிலை பாதுகாக்க வேண்டும். 50% வரியை அரசு ஈடு செய்தால், மீதி 50% சுமையை ஏற்றுமதியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஊக்கத்தொகை மற்றும் 5% வட்டி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தொழில் கிராமப்புறங்களில் பரவியுள்ளது. இதில் 90% கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்தத் தொழிலை விட்டு வெளியேறினால், மீண்டும் திரும்புவது கடினம். இதனால், பகுதிநேர விவசாயிகளாக இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications