கேன்சரில் இறந்த மகன்.. பதப்படுத்தப்பட்ட விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தைகள்.. புனே பெற்றோர் ஹேப்பி!
புற்றுநோயால் உயிரிழந்த திருமணமாகாத மகனின் விந்தணுக்களைக் கொண்டு, வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக்குழந்தைகளைப் பெற்றுள்ளனர் புனே பெற்றோர்.
Recommended Video
புனே: புற்றுநோயால் உயிரிழந்த தங்களது திருமணமாகாத மகனின் விந்தணுக்களைக் கொண்டு, வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக்குழந்தைகளைப் பெற்றுள்ளனர் புனேயைச் சேர்ந்த பெற்றோர். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விசயம் என்னவென்றால் வாடகைத்தாயாக செயல்பட்டது உயிரிழந்த இளைஞரின் உறவினர் ஆகும்.
புனேயைச் சேர்ந்த 27 வயது இளைஞர் பிரதாமேஷ், கடந்த 2010ம் ஆண்டு ஜெர்மனியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கேயே அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சைக்கு முன்னதாக அவரது விந்து செல்கள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் பார்வையை இழந்தார். பின் இந்தியா திரும்பிய பிரதாமேஷ், கடந்த 2016ம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மகன் வழி பேரக்குழந்தைகள்
ஒரே மகனாக பிரதாமேஷ், திருமணம் ஆகாமல் இளவயதில் இறந்தது அவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அப்போது தான், பிரதாமேஷின் விந்தணுக்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு நினைவில் வந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தையை பெற அவர்கள் முடிவு செய்தனர்.
செயற்கைக் கருத்தரிப்பு:
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஜெர்மனி மருத்துவமனையை அவர்கள் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர், அங்கிருந்த விந்து அணுக்களை புனேயில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் . அங்கு பிரதாமேஷின் விந்தணுக்களுடன் தானமாக பெற்ற கருமுட்டைகளைச் சேர்த்து ஆய்வகத்தில் கருவாக வளர்க்கப்பட்டு, வாடகைத்தாய் ஒருவரின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
தாயின் ஆசை:
முன்னதாக பிரதாமேஷின் தாயாரே, மகனுக்கு வாடகைத்தாயாக இருக்க திட்டமிட்டார். ஆனால், மருத்துவ சோதனையில் அவரது கருப்பை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரது உறவுக்கார பெண் ஒருவரே வாடகைத்தாயாக மாறினார்.
இரண்டு பேரக்குழந்தைகள்:
அப்பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்ட இரண்டு கருக்களுமே நல்ல ஆரோக்கியமாக வளர்ந்த நிலையில், கடந்த திங்களன்று அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் பிரதாமேஷின் பெற்றோர்.
தன்னம்பிக்கையானவன்:
இது தொடர்பாக பிரதாமேஷின் தாயார் ஆசிரியை ஜெயஸ்ரீ கூறுகையில், "எனது மகன் மிகவும் புத்திசாலி. நல்ல மாணவன் என ஆசிரியர்கள் அவனைப் பாராட்டுவர். படிப்பில் எப்போதும் அவன் தான் முதலிடம். மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையின் முன் மாதிரியாக வாழ்ந்தான். கீமோதெரபியால் முதலில் பார்வையை இழந்தான். பின்னர் பேச்சை இழந்து படுத்த படுக்கையானான். ஆனால் அப்போதும் அவன் நம்பிக்கையுடனேயே இருந்தான். நாங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவனது விருப்பமாக இருந்தது. அதனாலேயே அவன் மறைவுக்குப் பின்னரும் அவன் மூலமாக பேரப்பிள்ளைகளைப் பெற்றெடுக்க விரும்பினோம். இப்போது அதில் வெற்றியடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்களின் கருத்து:
ஆனால், பிரதாமேஷ் பெற்றோரின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வயதான ஜெயஸ்ரீ தம்பதியினர் எப்படி பிரதாமேஷின் இரட்டைக் குழந்தைகளை வளர்த்தெடுப்பர்? இதன் மூலம் அக்குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய பெற்றோரின் அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.