‛டிமிக்கி’ கொடுக்கும் ராகுல்.. அமித்ஷா குறித்த பேச்சால் மீண்டும் சம்மன்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொலை குற்றவாளி என அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் மீண்டும் அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. தற்போது கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். இவர் 2017 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இந்த வேளையில் அவர் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்து கர்நாடகா மாநில கோலார் கூட்டத்தில் ராகுல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் நீதிமன்றம் வழங்கிய நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மேல்முறையீடு செய்த நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் மீண்டும் அவர் எம்பியானார்.
இதற்கிடையே தான் ராகுல் காந்தி இன்னொரு சிக்கலில் மாட்டியுள்ளார். அதாவது கடந்த 2018ம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராகுல் காந்தி அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா குறித்து சில விஷயங்களை தெரிவித்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த கருத்து சர்ச்சையானது.
இதையடுத்து பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018ம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜனவரி 6ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்றும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications