உத்தரகாண்ட்.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த பள்ளிப் பேருந்து.. 7 மாணவர்கள் பலி?
உத்தரகாண்ட்டில் பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
டேராடூன்: உத்தரகாண்ட்டில் பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 மாணவர்கள் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உத்தரகாண்ட்டில் உள்ள காங்சாலி என்ற பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
தெஹ்ரி கார்க்வால் பகுதிக்கு அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் நேரத்தில், அந்த பள்ளி பேருந்து திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
வேகமாக சென்ற பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரை மீறி சென்று கீழே விழுந்துள்ளது. பாறைகள் நிரம்பிய, கொஞ்சம் நீர் ஓட கூடிய பள்ளத்தாக்கு பகுதிக்குள், பேருந்து கவிழ்ந்தது.
இந்த பள்ளி பேருந்தில் டிரைவர், மாணவர்கள் உட்பட 18 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது அங்கு மீட்பு பணிக்காக, பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.