உத்தரகாண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் பங்கேற்க முடியாது- சுப்ரீம்கோர்ட்
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 9 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆளும் காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிட சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்துள்ளார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தியானி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் நீதிபதி தியானி தீர்ப்பளித்தார்.
முதல்வர் ஹரீஷ் ராவத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது 9 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இந்த 9 பேரும் நாளைய வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது.
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபையில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்.எல்.ஏக்கள்; பாஜகவுக்கு 28; சிறிய கட்சிகளின் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு மொத்தம் 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
சிறிய கட்சிகளின் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால்தான் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நைனிடால் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 9 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணையில், நாளைய வாக்கெடுப்பில் தாங்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று 9 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றமோ, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 9 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூலை 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications