உத்தரகாண்ட் காங். ஆட்சியை கவிழ்க்க ரூ50 கோடி பேரம் பேசிய பாஜக.. திடுக் தகவல்
டேராடூன் : உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.50 கோடி பேரம் பேசியதாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
70 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ரவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த கட்சிக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
அம்மாநிலத்தில் பாஜகவுக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி தனியாக பிரிந்தனர். அவர்களது ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயன்றது.
இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஹரீஷ் ராவத் வருகிற 29-ந்தேதி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனிடையே பாஜக கட்சி ரூ.50 கோடி- ராஜ்யசபா சீட் என பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திர பண்டாரி, ஜீத்ராம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இருவரும் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களை அணி மாறுவதற்காக ரூ.50 கோடியுடன் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதாகவும், முதலில் ரூ.2.5 கோடியில் தொடங்கி ரூ.5 கோடி, 10 கோடி என கடைசியில் ரூ.50 கோடி வரை பேரம் பேசினர். பாஜகவின் சத்பால் மகராஜூக்கு நெருக்கமான ஒருவர் இந்த பேரத்தை பேசியதாக தெரிவித்தனர். ஆனால் இதனை பாஜக மறுத்துள்ளது.