உத்தரகண்டில் 58 இடங்களில் வெற்றி... 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி
உத்தரகண்ட் மாநிலத்தில் 70 இடங்களில் போட்டியிட்ட பாஜக 58 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.
டேராடூன்: உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் சட்டசபைக்கு கடந்த 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. பண மதிப்பிழப்புக்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 58 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

முதல்வர் ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரீத்வார் (ரூரல்), கிச்சா ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். இது காங்கிரஸுக்கு பலத்த பின்னடைவாகும். பாஜகவுக்கு எதிரான பிரசாரங்கள் அனைத்து எடுபடாமல் போனது.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து கடந்த 2000-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாநிலமான உருவான உத்தரகண்டில் 2000-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சி இருந்தது. அதன் பின்னர் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
அதன்பின்னர் 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்ற 4-ஆவது சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படாமல் நடத்தப்பட்ட தேர்தல்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications