உ.பி.யில் ஒரே அதிரடிதான்.. கள்ள சாராயம் விற்றால் மரண தண்டனை!
உத்திரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை என்று அதிரடியான சட்டத்தை கொண்டு வர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை, 12 மணி நேரத்திற்கு ஒரு என்கவுண்டர் என அதிரடிக்கு மேல் அதிரடியாய் நடந்து வருகிறது.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு மதுவிலக்கு ஆயத்தீர்வை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் தண்டனை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படவும் இந்த சட்ட திருத்தத்தில் இடம் அளிக்கும். நாட்டிலேயே கள்ளச்சாராய விற்பனை செய்வோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் உத்திரபிரதேசமாகும்.
கடுமையான தண்டனை
கள்ளச்சாராய விற்பனைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் இறப்பு விகிதம் குறைவதோடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதும் தடுக்கப்படும் என்று உத்திரபிரதேச மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக அளவில் என்கவுண்டர்
யோகி அமைச்சரவையின் இந்த அதிரடி முடிவு போல மற்றொரு அதிரடியான செய்தியும் வெளியாகியுள்ளது. உபியில் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு என்கவுண்டர் நடப்பதாக அரசின் பதிவுகள் கூறுகின்றன.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த
கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு ஏறத்தாழ 430 என்கவுண்டர்கள் நடந்திருக்கின்றன. மாநிலத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்களை செய்த போலீஸ் குழுவிற்கு அந்த மாநில அரசு பரிசுகளையும் அறிவித்துள்ளது.
மக்கள் பாதுகாப்பு
இதற்கு முன்னர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் பயந்தனர். ஆனால் அவர்களுக்கு இப்போது அந்த பயம் இல்லை, ஏன் மக்கள் கூட பயமின்றி பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 54 குற்றவாளிகள் மீது, 69 கேங்ஸ்டர்களின் சொத்துகளும் சமூக விரோதிகள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேடுதல் வேட்டையில் ஆயிரத்து 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 84 பேர் காயமடைந்துள்ளனர். இந்த என்கவுண்டர்கள் குறித்து மாஜிஸ்திரேட்டு மற்றும் மனித உரிமைகள் ஆணைய விசாரணைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.