சோனியா மருமனுக்கு விதிகளை மீறி சரமாரியாக சலுகை... ஹரியானா அரசுக்கு சிஏஜி அறிக்கை குட்டு
சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சியின் போது அக்கட்சித் தலைவர் சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு முறைகேடான வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை குழு ( சிஏஜி), ஹரியானா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
2013-14-ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை ஹரியானா மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு முறைகேடான வழிகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கைலைன் நிறுவனம் வதேராவுக்குச் சொந்தமானதாகும்.

அரசு நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது, நிலத்தின் மதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கும் நிகர லாபத்தை அரசுக் கருவூலத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை ஹரியாணா அரசு கொண்டு வரவில்லை.
இதைப் பயன்படுத்தி, நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிக லாபத்தில் விற்று ஒப்பந்ததாரர்கள் பயனடைந்தனர். அதாவது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் பெரிய விலைக்கு விற்று ஆதாயம் அடைந்துள்ளனர்.
குர்கான் மாவட்டத்தில் பிரதான இடத்தில் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தை ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது. வெறும் ரூ.7.5 கோடிக்கு ஹரியாணா அரசிடம் வாங்கிய அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் ஸ்கைலைன் நிறுவனத்துக்கு ரூ.50.5 கோடி லாபமாகக் கிடைத்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இதுபோல விற்பனை செய்து மொத்தமாக ரூ. 267.47 கோடியை ஈட்டியுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் விட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வதேராவின் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியிருந்தது. இந்நிலையில், சிஏஜி அறிக்கையில் வதேராவின் நிறுவனத்தின் மீது மோசடிப் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிஏஜி தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், குடியிருப்புகளை அமைக்கும் உரிமங்களை வழங்குவதில் ஹரியானா அரசு மேலும் தெளிவான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications