வாரணாசியில் பரம எதிரியான காங். வேட்பாளருக்கு ஆதரவு- முக்தர் அன்சாரி திடீர் அறிவிப்பால் பரபரப்பு!!

லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே வாரணாசி தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் முக்தர் அன்சாரி. அவர் பாஜக வேட்பாளரான முரளி மனோகர் ஜோஷியிடம் சில ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்திருந்தார்.
இதனால் இந்த தொகுதியில் முக்தர் அன்சாரி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாபியா கும்பலைச் சேர்ந்த அன்சாரி தற்போது குவாமி ஏக்தா மஞ்ச் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
மேலும் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அஜய் ராயின் சகோதர் அவ்தேஷ் ராயை போட்டுத் தள்ளியவர் முக்தர் அன்சாரி. அதனால் அவர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆதரிக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தாம் அஜய் ராயை ஆதரிப்பேன் என்று முக்தர் அன்சாரி அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நரேந்திர மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காகவே அஜய் ராயை தாம் ஆதரிப்பதாக முக்தர் அன்சாரி அறிவித்துள்ளார்.
முக்தர் அன்சாரியின் இந்த அறிவிப்பு நரேந்திர மோடி மற்றும் கேஜ்ரிவால் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!












Click it and Unblock the Notifications