மோடியின் விதியை முடிவு செய்யும் வாரனாசியில் மும்முனை போட்டி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரனாசியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி 9 கட்டமாக நடந்து வருகிறது. 8 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று இறுதி மற்றும் 9ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்று பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடும் வாரனாசி உள்ளிட்ட 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாரனாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். வாரனாசி தேர்தல் சர்வதேச ஊடகங்களையும் கவர்ந்துள்ளது.
இந்த தேர்தலை காண வெளிநாட்டவர்கள் வாரனாசி வந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி உத்தரபிரதேசத்தில் தந்தை, மகன் ஆட்சியும், மத்தியில் தாய், மகன் ஆட்சியும் நடக்கிறது என்று விமர்சித்தார். மோடி எப்படி பிறரை விமர்சனம் செய்தாரோ அதே போன்று பிற தலைவர்களும் அவரை விமர்சித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை கழுதை என்று கூறினார்.
வாரனாசியில் மோடி, கெஜ்ரிவால் மற்றும் மண்ணின் மைந்தரான காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இறுதிகட்ட வாக்குப்பதிவை அடுத்து வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications