2,000 பந்த் உட்பட 10,000 போராட்டங்கள்.. பலே வெள்ளையத்தேவா... வாட்டாள் நாகராஜ்! #TNNeedsKaveri
பெங்களூரு: கர்நாடகாவில் 2,000 பந்த் உட்பட 10,000க்கும் அதிகமான போராட்டங்களை இதுவரை நடத்தியிருக்கிறார் கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ். இந்த வாட்டாள் நாகராஜ்தான் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட கர்நாடகாவின் அண்டை மாநில மக்களை எதிரியாக தூண்டிவிட்டு வருபவர்...
கர்நாடகாவில் பந்த், மறியல், போராட்டம்.... என்றால் அங்கே வாட்டாள் நாகராஜ் என்ற பெயர் உச்சரிக்கப்படாமல் இருக்காது. அதுவும் காவிரி பிரச்சனை உட்பட தமிழகத்துக்கு எதிரான விவகாரங்களில் வாட்டாள் நாகராஜ் விஷத்தைக் கக்குவார்.

1960-ல் 21 வயதில் போராட்டக்காரராக களமிறங்கியவர் வாட்டாள் நாகராஜ்... இப்போது ஆயிரக்கணக்கான கன்னட அமைப்புகளை இணைத்து அந்த மாநிலத்தையே இன்று முழு அடைப்பால் போர்க்களமாக்கியிருக்கிறார்.
10,000 போராட்டங்கள்
தற்போது 67 வயதாகும் வாட்டாள் நாகராஜ் இதுவரை 2,000 மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கர்நாடகா, கன்னட விவகாரங்களுக்காக சுமார் 10,000க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
ஆண்டுக்கு 250 போராட்டம்
இது குறித்து கருத்து தெரிவித்த வாட்டாள் நாகராஜ், ஆண்டுதோறும் 200 முதல் 250 போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறேன். இதுவரை மொத்தம் 4,000 முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறேன். மக்களுக்காக போராடியதால் என் மீது 350 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் என்னை யாரும் தடுக்கவே முடியாது என்கிறார்.
முதல்வராகி இருப்பேன்...
மேலும் நான் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவர்... 1964-ம் ஆண்டே பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருந்திருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா என்னை காங்கிரஸில் சேர அழைப்பு விடுத்திருந்தார். அப்படி நான் சேர்ந்திருந்தால் கர்நாடகா முதல்வராகவும் ஆகி இருப்பேன்... ஆனால் வீதியில் இறங்கி போராடுவதைத்தான் நான் விரும்புகிறேன் என்கிறார் வாட்டாள் நாகராஜ்.
சிறுநீர் போராட்டம்
2009-ம் ஆண்டு பெங்களூருவில் ஆளுநர் மாளிகை முன்பாக சிறுநீர் கழிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து பீதியை கிளப்பினார் வாட்டாள் நாகராஜ். ஆனால் போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர்.
காதலர் தினத்துக்கு ஆதரவு
காதலர் தினத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2009-ல் தடை விதித்திருந்தன. ஆனால் வாட்டாள் நாகராஜோ, காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து காதலர்களை பாதுகாப்போம் என அதிரடி காட்டினார்.
சொந்த கட்சி மட்டும்...
வாட்டாள் நாகராஜை வளைத்துப் போட எத்தனையோ கட்சிகள் முயற்சித்திருக்கின்றன. ஆனால் நான் என்னுடைய கன்னட சலுவாளி வாட்டாள் பக்ஷாவுக்கு மட்டுமே விசுவாசமானவன் என்கிறார் வாட்டாள் நாகராஜ்...
இன்னும் எத்தனை பிரளயங்களை உருவாக்குவாரோ?












Click it and Unblock the Notifications