காசு, பணம்.. எக்ஸாம் எழுதாமல் பிஇ, பிடெக் பட்டம்.. போபால் பல்கலை. துணைவேந்தர் உள்பட மூவர் கைது
போபால்: போபாலில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் துணை வேந்தர்கள் மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை வழங்கியதாக கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பிடெக், பிஇ , எம்பிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்த கல்லூரியின் துணை வேந்தராக இருப்பவர் டாக்டர் பிரசாந்த் பிள்ளை. இவரும் முன்னாள் துணை வேந்தராக இருந்த டாக்டர் எஸ் எஸ் குஷ்வாவும் இணைந்து மாணவர்களுக்கு முறைகேடாக பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கியது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் 101 சான்றிதழ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தேர்வு எழுதாமல், கல்லூரிக்கு வராமல் இருக்கும் மாணவர்களுக்கு பெயர் பின்னால் ஒரு டிகிரியை போட்டுக் கொள்ள விரும்பினால் அதற்காக பணத்தை பெற்றுக் கொண்டு இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் முறைகேடு செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணை
கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடத்தப்பட்ட விசாரணையில் மலாக்பேட்டை, ஆசிப் நகர், முஷீராபாத், சடார்காட் ஆகிய காவல் நிலையங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகார் தொடர்பாக மாணவர்களிடம் இருந்து 44 சான்றிதழ்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

44 மோசடி சான்றிதழ்கள்
அவற்றில் பிடெக் மற்றும் பிஇ படிப்புகளை முடித்ததாக 13 பேருக்கும், எம்பிஏ, எம்எஸ்சி முடித்ததாக 31 பேருக்கும் முறைகேடாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் துணை வேந்தர் குஷ்வா, இன்னாள் துணை வேந்தர் பிரசாந்த் பிள்ளை, உதவி பேராசிரியர் கேடான் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடரும் தேடுதல் வேட்டை
மற்றொரு துணை வேந்தர் டாக்டர் சுனில் கபூர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ஹைதராபாத் நகரில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முறைகேடு செய்ததாக 7 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், 6 மாணவர்களின் பெற்றோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனிடையே போலீஸார் முன்பு ஆஜராக 6 மாணவர்களின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பணத்தை கொடுத்து சான்றிதழ் பெற்ற பிற மாணவர்களையும் கல்வியை மோசடியாக விற்பனை செய்த பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களையும் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.












Click it and Unblock the Notifications