அனுபவத்துல சொல்றேன்.. 3 தலைநகரங்கள் வேணவே வேணாம்.. ஜெகனை எச்சரிக்கும் வெங்கைய நாயுடு
விஜயவாடா: சட்டம், நீதி, நிர்வாகம் என மூன்றுக்கும் வெவ்வேறு இடங்களில் மூன்று தலைநகரங்கள் அமைக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி எடுத்துள்ள முடிவை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் 2014ல் தனி மாநிலமாக உருவெடுத்த பின்னர் ஹைதராபாத் தெலுங்கானா வசம் சென்றது. இதனால் புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் ஆந்திராவின் அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டார்.
அவர் அமராவதியில் தலைநகரை உருவாக்க பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து திட்டத்தை செயல்படுத்தி வந்தார். அங்கு பல்வேறு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானார்.

தலைநகர் பணிகள்
ஜெகன் முதல்வரான பின்னர் அமராவதி தலைநகர் திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஆந்திராவில் அமராவதி (சட்டசபை), விசாகப்பட்டினம்(நிர்வாகம்), கர்னூல்(நீதிமன்றங்கள்) ஆகிய மூன்று தலைநகரங்களை அமைக்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் உள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில் தலைநகர் திட்டத்திற்கு நிலம் கொடுத்த அமராவதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் பகுதி ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். அத்துடன் அரசின் முடிவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

தொந்தரவு
இதனிடையே விஜயவாடா அருகே அத்கூர் என்ற கிராமத்தில் ஸ்வர்ண பாரதி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் துணை தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றங்கள் என மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவு நிச்சயம் மக்களுக்கு தொந்தவராக இருக்கும்.

அனுபவத்தில் சொல்றேன்
தலைநகரை மையப்படுத்தித்தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகம் அமைய வேண்டும். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற அனைத்தும் ஒரே இடத்திலேயே இருப்பதே நல்லது. தலைநகர் விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை எனது 42 வருட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன் என்றார்.

முடிவை மாற்ற
மேலும் அவர் கூறுகையில் "மாநிலத்தின் வளர்ச்சியைப் பரவலாக்க வேண்டியது தான். ஆனால், அதேநேரம் தலைநகர் விஷயத்தில் எனது உறுதியான கருத்து என்னவென்றால், அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதே. மத்திய அரசு என்னிடம் இதுபற்றி கருத்து கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்வேன். ஆகவே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் முடிவை மாற்றி ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை அறிவிக்க வேண்டும்" என்றார்.

மறுநாள் இந்த கருத்து
அமராவதியிலிருந்து மாநில தலைநகரை மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த பகுதி விவசாயிகளின் தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினர். அவர்கள் சந்தித்து பேசிய ஒரு நாள் கழித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பரிதவிப்பு
அமராவதியில் தலைநகர் அமைப்பதற்காக நாட்டில் எங்குமே இல்லாத அளவாக அந்த பகுதி மக்கள் 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தைவிட்டுக்கொடுத்திருக்கிறார்கள். தற்போது நிலத்தை திரும்ப கொடுத்தால் பெரும் நஷ்டம் தங்களுக்கு ஏற்படும் என்கிறார்கள். அதனால் தலைநகரை மாற்ற அமராவதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் என்ன முடிவு இறுதியாக எடுப்பார் என்பதே ஆந்திராவில் பெரும் விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications