என்னா அடி..சத்தீஸ்கர் முதல்வருக்கு கோவில் கூட்டத்தில் சவுக்கடி! மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரேப்பா?
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகேல் தான் சவுக்கால் அடி வாங்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்ட மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் விளையாட்டுத்துறை பிரபலங்கள் என பலரும் மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகேல் வித்தியாசமாக தீபாவளி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்! கார்கில் சென்ற பிரதமர் மோடி! தொடரும் 9வது ஆண்டு!
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரால் கொண்டாடப்படுகிறது. சத்தீஸ்கர் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்திரனின் கோபத்துக்கு மக்கள் ஆளானதால் அவர் புயல் வெள்ளத்தை அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும் சிறுவனாக இருந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி குடை போல தூக்கி ஒற்றை விரலில் மக்களை காப்பாற்றினார் என்ற நம்பிக்கை உள்ளது.
கோவர்த்தன பூஜை
இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் சத்தீஸ்கரில் கோவர்த்தன பூஜையாக கொண்டாடப்படுகிறது. தற்போது சத்தீஸ்கர் மாநில முதல்வராக இருக்கும் பூபேஷ் பாகேல் ஒவ்வொரு ஆண்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தூர்க் மாவட்டத்தின் ஜன்கிரி என்ற கிராமத்தில் கோவர்த்தன பூஜையில் கலந்து கொள்வது வழக்கம் இந்த பூஜையின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை சவுக்கால் அடிக்கும் வழக்கம் உள்ளது. அப்படி சவுக்கால் அடி வாங்கினால் உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகள் நீங்கி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.
சவுக்கடி வாங்கிய முதல்வர்
தமிழகத்திலும் இதுபோல ஒரு சில கோவில்களில் சாட்டை மற்றும் சவுக்கால் அடிக்கும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அந்த கிராமத்தில் கோவர்த்தன பூஜை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் வழக்கம் போல நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தனது கையை நீட்டி சவுக்கால் அடி வாங்கினார். முதல்வர் ஐந்து அடிகளுக்கு மேல் அவர் வாங்கிய நிலையில் அருகில் இருந்தோர் அவரை உற்சாகப்படுத்தினர்.
ட்ரெண்டாகும் வீடியோ
தற்போது இந்த வீடியோவை அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ ட்ரெண்டாகி உள்ளது. கடந்த ஆண்டு பூபேஷ் பாகேல் சவுக்கடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. சவுக்கடி வாங்குவது பெரிய பிரச்சனை இல்லை.. இது போன்ற நிகழ்ச்சிகள் விவசாயிகள் நன்மைக்காக பின்பற்றப்படுகிறது, இதில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் நம்மை இது பணிவாக வைத்திருக்கும் என கூறியுள்ளார். மக்களின் நலனுக்காக ஆண்டுதோறும் இந்த பூஜையில் அவர் கலந்து கொள்வார் என சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது.