வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குற்றச்சாட்டு.. மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்
டெல்லி: வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குற்றச்சாட்டின்பேரில், அமலாக்கத்துறையின் சிபாரிசை தொடர்ந்து, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
பல்வேறு வங்கிகளிடமிருந்து மொத்தம் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவுக்கு கடன் பெற்றுள்ளார் விஜய் மல்லையா. கடனை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் வங்கிகள் சேர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
இதையடுத்து மல்லையா வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே, முதல் தவணையாக செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.4 ஆயிரம் கோடியை வழங்க மல்லையா வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் வங்கிகள் இதை ஏற்கவில்லை.
இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில், நேற்று டெல்லியிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முறைப்படி கோரிக்கை வைத்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் இக்கோரிக்கையை தெரிவித்தது.
இதன்பேரில் விஜய் மல்லையா பாஸ்போர்ட் இன்று அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 10 (ஏ)-கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.