உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த தலித் இளைஞரின் குடும்பப் பெண்கள் 5 பேரை நிர்வாணமாக்கி அராஜகம்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் உயர்சாதி பெண் ஒருவரைக் காதலித்த தலித் இளைஞரின் குடும்பப் பெண்கள் 5 பேரை பெண் வீட்டார் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சாஜன்பூர் மாவட்டம் ஜலால்பாத் பகுதி அருகே உள்ளது பாதே ஹரிவா என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த உயர்சாதி பெண் ஒருவருக்கு தலித் இளைஞனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, பெண்ணின் உறவினர்கள் இளைஞரின் வீட்டுக்குச் சென்றனர். பின்னர் அந்த இளைஞரின் தாயார் மற்றும் உறவு பெண்கள் 5 பேரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
உயர்ஜாதியினரின் இந்தச் செயலை அங்கிருந்த சிலர் கண்டித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.