சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல் களம்! முழுவீச்சில் களமிறங்கிய வினேஷ் போகத்.. வேட்புமனு தாக்கல்
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினேஷ் போகத், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இந்த பிளானின் மாஸ்டர் மூவ்தான், வினேஷ் போகத்தை காங்கிரஸில் இணைப்பது. மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை எழுப்பியதிலும், அதை போராட்டமாக மாற்றியதிலும் வினேஷ் போகத் பங்கு மிகப்பெரியது.

இந்த போராட்டத்தின் பின்னால், நாடே அணி திரண்டது. இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மறுபுறம் ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் மிஸ்ஸானது. எல்லா விஷயத்திலும் போராடிய வினேஷ் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில்தான் அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. இப்படி இருக்கையில், கடந்த செப்.4ம் தேதி ஹரியானா வந்திருந்த ராகுல் காந்தியை வினேஷ் போகத் சந்தித்தார். அதனை தொடர்ந்து இன்று அவர் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து, பாஜக மீதான விமர்சனங்களை கூர்மையாக வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் தான் தோற்ற போது பொறுப்பாளராக இருந்த பி.டி.உஷா தனக்காக எதுவும் செய்யவில்லை என்றும், அங்கு வந்தும் அரசியல் செய்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து இன்று ஜூலானா தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன.
மறுபுறம் ஜனநாய ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications