மொகரம் பண்டிகை குறித்து கேலி.. ஆதரவு வாபஸ் மிரட்டல்: மன்னிப்புக் கேட்ட ஆம் ஆத்மி கட்சி!
டெல்லி: மொகரம் பண்டிகை குறித்து கேலியாக பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால் ஆதரவை திரும்ப பெற நேரிடும் என ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷொயிப் இக்பாலின் மிரட்டலைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் மன்னிப்புக் கேட்டார்.
டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷொயிப் இக்பால் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பேசிய குமார் பிஸ்வாஸ், மொகரம் பண்டிகை குறித்து கேலியாக பேசியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அவ்வாறு பேசியதற்காக மன்னிப்புக் கேட்காவிட்டால் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என ஷொயிப் இக்பால் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை தொடர்ந்து, குமார் விஸ்வாஸ் இன்று மன்னிப்பு கேட்டார்.
எந்த ஒரு மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால், தாம் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார். அதே சமயம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று கேட்டபோது, அதற்காகத்தான் (குமார் விஸ்வாஸ் ) மன்னிப்பு கேட்டுவிட்டாரே எனக் கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications