கர்நாடகாவில் வோல்வோ பஸ் தீப்பிடித்து விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 40 பேர் காயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேஷனல் டிராவல்ஸுக்கு சொந்தமான வோல்வோ பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பியது. பேருந்து ஹவேரி மாவட்டத்தில் உள்ள குனிமெல்லி பாலம் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருக்கையில் சாலையில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது.
திடீர் என்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு பயணிகள் எழுந்து பார்த்தபோது பேருந்து தீப்பிடித்துக் கொண்டிருந்தது. பயணி ஒருவர் பேருந்து கண்ணாடியை உடைப்பதற்குள் 2 வயது குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கிளீனரும், 2 டிரைவர்களும் தப்பித்துவிட்டனர்.
மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ஜமீல் அகமதுவின் தம்பி ஷகீல் அகமது தான் நேஷனல் டிராவல்ஸின் உரிமையாளர் ஆவார்.
முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 45 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications