ம.பி. பாஜக அரசை உலுக்கும் "வியாபம்": 47வது மர்ம மரணம்..பெண் போலீஸ் அதிகாரி 'தற்கொலை'?
போபால்: மத்திய பிரதேச ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசை 'வியாபம்' முறைகேடும் இந்த ஊழலில் தொடர்புடைய நபர்களின் மர்ம மரணங்களும் நாள்தோறும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நிலையில் "வியாபம் " மூலம் போலீசில் சேர்ந்த பயிற்சி பெண் சப் இன்ஸ்பெக்டர் அனாமிகா குஷ்வாகா, ஏரியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை செய்ததில் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததும், அதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வியாபம் ஊழல் குறித்து விசாரணை மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது முறைகேட்டில் ஈடுபட்டோர், ஆதாயமடைந்தோர் என ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்.
அதே நேரத்தில் இந்த முறைகேட்டில் சிக்கிய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தும் வருகின்றனர். இதில் அம்மாநில ஆளுநரின் மகனும் அடக்கம். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இப்படி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இதனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தும் உள்ளார்.
இதனிடையே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உதவிய ஜபல்பூர் என்.எஸ். மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் டெல்லியில் இறந்தார். அதேபோல் வியாபம் ஊழல் குறித்து செய்தி சேகரித்த டிவி டுடே குழும செய்தியாளர் அக்ஷய் சிங் நேற்று வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமாக உயிரிழந்தார்.
இந்நிலையில்தான் "வியாபம்" மூலம் போலீசில் சேர்ந்த பயிற்சி பெண் சப் இன்ஸ்பெக்டர் அனாமிகா குஷ்வாகா மர்மமான முறையில் ஏரியில் இன்று பிணமாக கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் வியாபம் மர்ம மரணங்கள் தொடர்வது மத்திய பிரதேசத்தில் பெரும் பீதியை கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications