அப்படியே மண்ணுக்குள் புதைந்த மக்கள்! கடைசியாக செல்போன் சிக்னல் காட்டிய இடங்களில் தேடும் மீட்பு படை
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை டிரோன், ஜிபிஎஸ் கொண்டு தேடி வரும் நிலையில் அவர்களுடைய செல்போன், அந்த செல்போன் கடைசியாக இருந்த இடம் உள்ளிட்டவை கொண்டு தேடி வருவதாக வயநாடு மாவட்ட ஆட்சியர் மேக ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: வயநாடு நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளுக்குள்பட்ட குக்கிராமங்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை 6 மண்டலங்களாக பிரித்து 40-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்த இடத்தில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிய மோப்ப நாய்களை கொண்டு தொழில்நுட்ப கருவிகளை கொண்டு தேடி வருகிறார்கள். மேலும் ஜேசிபி கொண்டு இடிப்பாடுகளை அகற்றி வருகிறார்கள்.
டிரோன் மூலம் வானிலிருந்து புகைப்படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கொண்டு சிலர் வசித்து வந்தது கண்டறியப்படுகிறது. அது போல் அவர்களுடைய செல்போன் டேட்டாக்கள், அவர்கள் கடைசியாக இருந்த பகுதி உள்ளிட்டவை கொண்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள இடிபாடுகளை நீக்கினால் தேடுதல் பணிகள் விரைந்து நடைபெற உதவும். இந்த தொழில்நுட்பங்கள் மூலம் கிடைத்த தகவல்களை மீட்பு படையினரிடம் கொடுத்துள்ளோம். அட்டமலை மற்று ஆரன்மலை, முண்டக்கை, பஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமம், வெள்ளரிமலை அரசு பள்ளி, ஆற்றுபடுகை ஆகிய இடங்களில் மீட்பு படையினர் 40 பேர் தேடி வருகிறார்கள்.
கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300- க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த மோசமான வானிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மணலும் தண்ணீரும் கலந்து பல இடங்கள் சேறாக காட்சியளிக்கின்றன. அது போல் வீடுகள், கட்டட இடிபாடுகளிலும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா, இல்லை ஏதாவது உடல்கள் கிடைக்கின்றனவா என தேடி வருகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த இடங்களில் பல பகுதிகளில் சேறாகிவிட்டதால் அங்கு நடப்பதற்கே பேரிடர் குழுவினர் சிரமப்படுகிறார்கள். கெண்டை கால் அளவிற்கு அவர்களுடைய கால்கள் மண்ணில் உள்ளே புதைகிறது. இது போதாகுறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன.
தென் மேற்கு பருவமழை காரணமாக வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போனார்கள்.
முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் இடுபாடுகளுக்குள் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications