வளரும் பாஜக.. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.. இடதுசாரிகளுடன் கை கோர்க்க மே.வ.காங். கோரிக்கை
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளது. அப்போதுதான் மேற்கு வங்கத்தில் பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியும், 2021ல் மமதா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதையும் தடுக்க முடியும் என அது கூறியுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தாக வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று சிபிஎம் பொலிட்பீரோ முடிவு செய்துள்ளது. இது கவனிப்புக்குரியது. எனவே உடனடியாக இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அதேபோல 2021ல் மமதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது சிபிஎம் ரெய்கஞ்ச், முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு மால்டா வடக்கு, மால்டா தெற்கு, பேரம்பூர், ஜாங்கிபுர் ஆகிய தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இந்த நான்கு தொகுதிகளைத் தவிர புருலியாவிலும் காங்கிரஸுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கும், பாஜகவுக்கும் சவாலாகவே அமையும் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications