மங்களூரு துப்பாக்கிச் சூடு- பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ5 லட்சம்: மமதா- எடியூராப்பா மீது அட்டாக்
கொல்கத்தா: கர்நாடகாவின் மங்களூருவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ5 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இன்று 5-வது பேரணியை நடத்தினார். இன்றும் இப்பேரணியில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் பேசிய மமதா பானர்ஜி, குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றை எதிர்த்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராட வேண்டும். போராட்டம் நடத்துவது என்பது மாணவர்களின் ஜனநாயக உரிமை.
ஜனநாயக வழியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாஜகவைப் பொறுத்தவரையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.
கர்நாடகாவின் மங்களூருவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா முதலில் அறிவித்தார்.
பின்னர் இதை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் பாஜகவின் நிலைப்பாடு. மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு நாங்கள் தலா ரூ5 லட்சம் நிதி உதவியை வழங்குகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications