மே.வங்க சட்டசபை தேர்தல்: நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு- 43 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. இதில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது - 78.36% வாக்குகள் பதிவு
வன்முறை
4-ம் கட்ட வாக்குப் பதிவின் போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். 5-ம் கட்ட வாக்குப் பதிவின் போதும் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
நாளை தேர்தல்
இந்த நிலையில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவாக 43 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். 6-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 27 பேர் பெண்கள்.
14,480 வாக்கு சாவடிகள்
6-ம் கட்ட வாக்குப் பதிவானது 14,480 வாக்குச் சாவடிகளில் நடைபெறும். மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். 43 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மோதுகின்றன. சிபிஎம் 23; காங்கிரஸ் 12; பார்வர்டு பிளாக்-4 சிபிஐ- 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பலத்த பாதுகாப்பு
தற்போது கொரோனா பரவல் அதி உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கொரோனா கால கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் வாக்களிக்கவும் வன்முறைகள் இல்லாமல் தேர்தல் நடைபெறவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.