"பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடு இருக்கிறது.." மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அம்மாநில முதல்வர் மம்தா சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது மேற்கு வங்கத்திலிருந்து பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே பாஜகவுக்கும் ஸ்டாலினுக்கும் காங்கிரஸுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கும் எனத் தான் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு உடன் இணைந்து மேற்கு வங்கத்திலும் இந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நடக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் மம்தா அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

மம்தா குற்றச்சாட்டு
இதற்கிடையே மம்தா பானர்ஜி சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். இது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் தேர்தல் ஆணையம் இடையே ரகசிய உடன்பாடு இருக்கலாம் எனப் பகிரங்கமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். வங்கதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்திற்கு மாற்றப்படுவதாகவும் இதன் காரணமாகவே பாஜகவுக்கும் ஸ்டாலினுக்கும் காங்கிரஸுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கும் எனத் தான் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இடமாற்றம்
மேற்கு வங்கத்திலிருந்து பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்படுவது, மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளைப் பாதிப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 500 அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. மற்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிலரே மாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய அதிகாரிகள் இடமாற்றங்கள் மாநிலத்தின் முன்னேற்றப் பணிகளுக்குப் பெரிய தடையாக உள்ளதாக மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
ரகசிய உடன்பாடு
நதியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய முதல்வர் மம்தா, "சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்குப் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் ஸ்டாலினுடன் உங்களுக்கு (பாஜக) சில ரகசிய உடன்பாடு இருக்க வேண்டும். பாஜக தங்கள் சொந்த அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கிறார்கள். இதன் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியில் உள்ள பாஜகவே நமது அடுத்த இலக்கு.. தேவைப்பட்டால், அனைத்து கட்சிகளையும் தங்களோடு இணைத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
எஸ்ஐஆர் பணிகள்
இப்போது எஸ்ஐஆர் எனச் சொல்லிப் பல லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். ஆனால், இதே வாக்காளர்களைக் கொண்டே 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் தான் நீங்கள் வென்றீர்கள். அதில் பிழை என்றால் நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) பதவி விலக வேண்டும், உள்துறை அமைச்சர், முழு அரசும் பதவி விலக வேண்டும்.. நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், மக்கள் உங்களை அதைச் செய்ய வைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் 250 பேர் இறந்தனர்.. அதற்கு நீங்கள் (பாஜக) பொறுப்பேற்க வேண்டும். நான் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டவில்லை, அவர்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலக் கிளிப்பிள்ளைகள் மட்டுமே.. இந்தியாவில் குறுகிய காலம் வசிப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் நீண்டகாலமாக வசித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது ஏன்? ஒன்றுபட்ட இந்தியாவைக் காண நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications