மே.வங்கத்தில் 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு- அரசுடன் பேச்சு நடத்த தயார் என அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பணி பாதுகாப்பு கோரி 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் 2 பேரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நோயாளி ஒருவரது உறவினர்கள் கொடூரமாகத் தாக்கினர். இதனால் பயிற்சி மருத்துவர்கள் கொந்தளித்தனர்.

தங்களுக்கு பாதுகாப்பு கோரி 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர்.
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஆளுநர் திரிபாதி கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு ஏற்கிறது; மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.
இன்றும் 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தை தொடருகின்றனர். அத்துடன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications