மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து நிற்கும் கேள்வியாக இருக்கிறது. ஒருபுறம் திரிணாமுல் கோட்டையைத் தகர்க்கத் துடிக்கும் பாஜக, மறுபுறம் 4வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் மம்தா உள்ளனர். கருத்துக்கணிப்புகள் பாஜக 100+ இடங்களில் வெல்லும் என்றாலும் மம்தாவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்குவது அத்தனை எளிதான காரியமாகத் தெரியவில்லை.
மேற்கு வங்கத்தில் இந்த முறை 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021ல் 77 இடங்களைப் பிடித்த பாஜக, இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. களத்திலும் அவர்களுக்கு ஆதரவாகச் சூழல்களே உள்ளன.

பாஜக
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அடிமட்ட அளவில் நிலவரம் அதிகார ஆதிக்கம் மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கொல்கத்தா போன்ற நகர்ப்புறங்களில் படித்த இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை ஒரு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் நேரடி கவனம் மற்றும் மாநிலத் தலைவர்களின் அதிரடி வியூகங்கள் பாஜகவை ஒரு வலுவான மாற்றுச் சக்தியாக மக்கள் முன் நிறுத்தியுள்ளன.
தேர்தல் அறிக்கை
அதேபோல அமித் ஷா நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உதவித் தொகை என நலத்திட்டங்கள் ஒரு புறம்.. 6 மாதங்களில் பொது சிவில் சட்டம், மத வழிபாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டம் எனத் தனது பிரதான முழக்கங்கள் என இருசேர இருந்தது தேர்தல் அறிக்கை. அதேபோல இதுவரை வந்த சர்வேக்களும் பாஜக எளிதாக 100+ இடங்களைக் கடந்துவிடும் என்றே சொல்கிறது. இருப்பினும், பாஜகவின் இந்த வளர்ச்சியும் ஆதரவும் மம்தாவை முழுமையாக வீழ்த்த போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ்
பாஜக ஒருபுறம் அசுர வளர்ச்சி கண்டாலும், மம்தா பானர்ஜியின் தனிப்பட்ட செல்வாக்கை உடைப்பது இமாலய சவாலாகவே இருக்கிறது. "பெங்காலின் மகள்" என்ற மம்தாவின் இமேஜ் இப்போதும் கிராமப்புறப் பெண்களிடையே இருக்கிறது. இலவச ரேஷன், பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் 'லட்சுமீர் பண்டார்' போன்ற திட்டங்கள் மம்தாவிற்கு ஒரு பிரம்மாண்டமான பாதுகாப்பு அரணாக மாறியுள்ளன.
மேலும், மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவரது துணிச்சல், வங்கள உணர்ச்சியைத் தூண்டி அவருக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கிறது. எஸ்ஐஆர் விவகாரத்தில் மம்தாவால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே இருந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சுமார் 30 சதவீதம் வரை உள்ள சிறுபான்மையினர் மேற்கு வங்கத்தில் சிலர் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருந்தாலும், வேறு வலுவான மாற்று இல்லை என்பது வாக்குகள் பெரியளவில் சிதறாது. இதனால் பாஜகவின் வளர்ச்சி மம்தாவை ஆட்டி பார்க்குமே தவிர, தூக்கி எறிந்துவிடாது.
மம்தாவின் அரசியல் வியூகம்
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 215 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றது. வெறும் 3 எம்எல்ஏக்களுடன் தேர்தலைச் சந்தித்த பாஜக எகிறி 77 இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு இடத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் துடைத்தெறியப்பட்டன.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு இடங்கள் கூடினாலும், மம்தாவின் அரசியல் வியூகம் இன்னும் பெங்கால் மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. எனவே, மீண்டும் மம்தாவே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வாய்ப்புகள் அதிகம்!











Click it and Unblock the Notifications