மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: வன்முறை குண்டர்கள்- கடும் நடவடிக்கை- ஆளுநர் கடும் எச்சரிக்கை!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்முறைகளில் குண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பாளர்களாக சுமார் 2 லட்சம் பேர் போட்டியிட்டனர்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற போது வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தை எட்டின.வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், தீவைத்தல் என வன்முறைகள் தாண்டவமாடின. இத்தகைய வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 650க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். கண்ட்ரோல் ரூம்களில் உட்கார்ந்து கொண்டு வன்முறைக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குண்டர்களை இறக்கிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். முன்னதாக டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்த போஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications