6 மாத சிறை தண்டனையிலிருந்து தப்ப, நீதிபதி கர்ணனுக்கு இப்படியும் வாய்ப்பு உள்ளது!
சுப்ரீம் கோர்ட் இன்னும் கூட தனது தண்டனைக்கான காரணம் குறித்து விரிவான உத்தரவை பிறப்பிக்கவில்லை. எனவே இதையே காரணமாக கூற கர்ணன் முயலலாம்.
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக இப்படி, ஹைகோர்ட் நீதிபதிக்கு, சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதனால் இந்த பிரச்சினை தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நீதிபதி என்ற மாண்பை காக்கும் வகையில், சிறை தண்டனையிலிருந்து தப்ப, கர்ணன் சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
நீதிபதி கர்ணனுக்கு தண்டனையை தவிர்க்க, என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பார்க்கலாம்:
அவர் உச்ச நீதிமன்றத்தையே அணுகுவதோடு, தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கலாம். இது சமரசமான செயலுக்கு வழிவகுக்கும்.
அரசியலமைப்பின் 147 வது பிரிவுப்படி, இப்படிப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும். அல்லது, கர்ணன் உடனடியாக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தனது தண்டனையின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடலாம்.
சுப்ரீம் கோர்ட் இன்னும் கூட தனது தண்டனைக்கான காரணம் குறித்து விரிவான உத்தரவை பிறப்பிக்கவில்லை. எனவே இதையே காரணமாக கூற கர்ணன் முயலலாம்.
உச்சநீதிமன்றம் உரிய காரணங்களை விரிவாக கூறாததால், தன்னால், மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று அவர் கூறலாம். சுப்ரீம்கோர்ட் தனது உத்தரவில், கர்ணன் முதலில் நாட்டின் குடிமகன் என்றும், பிறகுதான், நீதிபதி என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகள் அடிப்படையிலேயே இதை அணுகி மேற்கண்டவாறு அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியும்.
பல நீதிமன்றங்களில் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்ட கர்ணன், இந்த விவகாரத்தை சுமுகமாக முடிப்பார் என்றே சட்டத்துறை வல்லுநர்கள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications