தலித் வீட்டுக்கு சென்றது 'பப்ளிசிட்டிக்காகவா'? நிருபரின் கேள்வியால் கொந்தளித்த ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஹரியானாவில், தீ வைத்து எரிக்கப்பட்டு இரு உயிர்களை பறிகொடுத்த தலித் குடும்பத்தினரை சந்தித்தார். இந்த சந்திப்பு விளம்பர நோக்கத்திற்காகவா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கடும் கோபமடைந்தார் ராகுல் காந்தி.
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் மாவட்டம் பலாக்பரை அடுத்த சன்பேட் கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பெற்றோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரை சன்பேட் கிராமத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை ராகுல் சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், "இது உங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான பயணம் என்றும், இந்த சந்தர்ப்பத்தை புகைப்பட வாய்ப்பிற்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறதே" என்றும் கேட்டார். இதனால், கடும் கோபமடைந்த ராகுல் காந்தி, இது தான் பாஜக.வைச் சேர்ந்த பிரதமர், மாநில முதல்வர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சின் மனோநிலை.
ஏழை, மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கான அரசாக ஹரியானா மாநில அரசு ஒரு போதும் இருந்தது கிடையாது. இதுபோன்ற பாதிக்கப்பட மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் மீண்டும் மீண்டும் வருவேன் என்று ஆவேசமாகக் கூறினார்.