இடைதேர்தலில் எதிரணி ஓரணி ஆனதற்கே இப்படி.. இன்னும் 3ஆவது அணி உருவானால்?
வரும் மக்களவை தேர்தலில் 3-ஆவது அணி உருவானால் பாஜகவின் நிலை என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
டெல்லி: இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் கூட்டணி வைத்ததற்கே பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால் 3வது அணி உருவானால் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 11 -ஆம் தேதி காலியாக உள்ள உ.பி.யின் கோராக்பூர், புல்பூர் இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கை
இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கோராக்பூர், புல்பூர், அரேரியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பீகாரில் பஹாபூவா தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றாலும் மற்றொரு தொகுதியான ஜகனாபாத்தில் ஆர்ஜேடி முன்னிலை பெற்றுள்ளது.
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக எலியும் பூனையுமாக இருந்த சமாஜ்வாதியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியே உத்தரப் பிரதேசம் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த தோல்வி ஆகும்.
மம்தா தலைமையில்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அந்த மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர ராவ் 3-ஆவது அணி உருவாக்க அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சி பலவீனமாவதை அடுத்து தனது கட்சி தலைமையில் மூன்றாவது அணிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முயல்கிறார். இதையடுத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.
முட்டுக்கட்டை போடும் சோனியா
இந்நிலையில் திமுக, என்சிபி, மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தியின் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே மம்தா தலைமையில் உருவாகும் 3-ஆவது அணிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சோனியா மற்ற கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டியதாகவே பார்க்கப்படுகிறது நேற்று நடந்த இரவு விருந்து.
அனைவரும் ஒன்றானால்
இடைத்தேர்தல்களில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு ஓரணியில் செயல்பட்டதற்கே பாஜகவுக்கு படுதோல்வி கிடைத்துவிட்டது. இதே 3-அணி என்று ஒன்று உருவாகி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டால் பாஜக கதி என்னவாகும் என்பது தான் இன்றைய தேசிய அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.