இடிக்கப்பட்ட வீடுகள், கடைகள்.. கண்டுகொள்ளாத பாஜக.. அயோத்தியில் தோல்வி ஏன்? அடுக்கடுக்கான காரணங்கள்!
அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணங்களை குறித்து பார்க்கலாம்.
நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மாநில முடிவுகள் பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தல் 62 இடங்களை வென்றிருந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலில் 70க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வோம் என்று பாஜக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு 35 இடங்களும், இந்தியா கூட்டணி 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக அயோத்தி நகரை உள்ளடக்கிய ஃபைசாபாத் லோக்சபா தொகுதியில் பாஜக அடைந்த தோல்வி பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் அயோத்தி ராமஜென்மபூமியில் பாலராமருக்கு பிரம்மாண்டமாக கோயிலை எழுப்பி விழாவை கொண்டாடிய பாஜக, அதே கோயில் அமைந்துள்ள தொகுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக அடைந்துள்ள தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
ஃபைசாபாத் தொகுதிகளில் பாஜக சார்பாக ஏற்கனவே போட்டியிட்டு 2 முறை வெற்றிபெற்ற வேட்பாளரான லல்லு சிங் மீண்டும் களமிறங்கினார். அதேபோல் சமாஜ்வாதி கட்சி சார்பாக அவதேஷ் பிரசாத் களமிறக்கப்பட்டார். இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் லல்லு சிங்கை தோற்கடித்துள்ளார். ஏற்கனவே 2 முறை வென்ற தொகுதியில், ராமருக்கு கோயில் கட்டிய போதும் தோல்வியடைந்தது எப்படி என்று புரியாமல் பாஜகவினர் குழம்பியுள்ளனர்.
ராமருக்கு கோயில் கட்டிய போது சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக அயோத்தியில் ஏராளமான வீடுகளும், கடைகளும் இடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாஜக வேட்பாளர் லல்லு சிங், பாதிக்கப்பட்ட மக்களையும், வியாபாரிகளையும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. மறுமுனையில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், இந்த பிரச்சனையும் பிரச்சாரத்தில் தீவிரமாக எடுத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர் லல்லு சிங், சமூகத்துடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து கொண்டதாகவும், தேர்தல் பரப்புரையின் போது கூட ஆணவத்துடன் செயல்பட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 2 முறை எம்பி-யாக இருந்த போது லல்லு சிங் தொகுதி மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று மக்கள் மத்தியில் பேச்சுகளும் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இதனால் மக்கள் மத்தியில் பாஜக மீதான அதிருப்தி நிச்சயம் இருக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டு சமாஜ்வாதி கட்சியினர் பணியாற்றியுள்ளனர். அதேபோல் ஃபைசாபாத் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவை பெறுவதிலும் சமாஜ்வாதி கட்சி தீவிரமாக இருந்துள்ளது. பாஜகவின் பிரச்சாரம் அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றை பிரதானமாக கொண்டிருந்தது. அதேபோல் சமாஜ்வாதி கட்சியின் பிரச்சாரம் வேலைவாய்ப்பு, விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications