நாடு முழுக்க விவாதப்பொருளாகியுள்ள முத்தலாக்.. பின்னணி என்ன?
டெல்லி: 'முத்தலாக்' நடைமுறை வரும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'முத்தலாக்' நடைமுறையை நீக்க வேண்டுமானால் சட்டம் இயற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யூ.யூ.லலித் மற்றும் அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 'முத்தலாக்' என்றால் என்ன என்பது குறித்த புரிதல் சமூகத்தில் பலருக்கும் இல்லை.

முத்தலாக் என்றால் என்ன?:
'முத்தலாக்' என்பது இந்திய இஸ்லாமிய சமூகத்தின் பின்பற்றக்கூடிய ஒரு விவாகரத்து நடைமுறை. தலாக் என்ற வார்த்தையை 3 முறை கூறி ஒரு இஸ்லாமிய ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடியும்.
இப்படி தலாக் சொல்வது வாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று கிடையாது. எழுத்து வடிவிலும் கூட இருக்கலாம். சமீப காலங்களில் எஸ்எம்எஸ், இமெயில், வாட்ஸ்அப், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக கூட தலாக் சொல்லப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணத்தை கூறி விவாகரத்திற்கு கணவர் விண்ணப்பிக்கலாம். கணவர் தலாக் சொல்லும்போது மனைவி உடனிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தலாக் கூறப்படும் காலகட்டங்களுக்கு நடுவே இடைவெளி இருத்தல் அவசியம். இந்த நேரங்களில் தம்பதிகளை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கும். விவாகரத்தான பெண் மீண்டும் அதே கணவரை திருமணம் செய்ய முடியாது. அப்படி திருமணம் செய்ய நினைத்தால் இன்னொருவரை திருமணம் செய்துவிட்டே முதல் கணவரை திருமணம் செய்ய வேண்டும். இதற்கு நிக்கா ஹலாலா என்று பெயர்.












Click it and Unblock the Notifications