வார்த்தையை விட்ட வங்கதேச பிரதமர்! பற்றி எறியும் மாணவர் போராட்டம்- உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது
டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதை ரத்து செய்ய வலியுறுத்திய மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதனால் 11 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் இந்த போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இப்போது மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு அரசு வேலைகளில் அந்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு தரப்படுகிறது.

வன்முறை: அதை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் தான் வன்முறையாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மாணவர் அமைப்பினர் மறுத்துவிட்டனர். தலைநகர் டாக்காவில் இந்த மாணவர் போராட்டம் சுமார் 2 வாரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ஆளும் தரப்புடன் தொடர்புடைய குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கிய நிலையில், அது வன்முறையாக மாறி இருக்கிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5ம் தேதி அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவே மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணமாகும்.
போராட்டம் ஏன்: வங்கதேசத்தில் சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசு வேலைகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றே போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஆளும் தரப்பினர் திடீரென தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர்.
வங்கதேசம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி வருகின்றனர். தாங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அனைவருக்கும் நியாயமான தகுதி அடிப்படையில் வேலை கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வரும் நிலையில், டாக்கா பல்கலைக்கழகம் மற்றும் சிட்டகாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச இட ஒதுக்கீடு முறை என்ன: வங்கதேசத்தின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் 1972ஆம் ஆண்டில் ஒரு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சுதந்திரப் போரில் போராடியவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை வழங்கினார். அதன்படி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு அரசு வேலைகளில் 44 சதவீதம் பொது பிரிவினருக்கு நிரப்பப்படும். மீதமுள்ள 56 சதவீதம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு 10 சதவீதம், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
கோரிக்கை என்ன: விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம் இன சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை அவர்கள் எதிர்க்கவில்லை.
இந்த போராட்டத்தை அரசு கடுமையாக ஒடுக்க முயன்று வருகிறது. ஆனால், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கையாண்டு வருகின்றனர். அங்கே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அய்யய்யோ சீனாவா? வேண்டவே வேண்டாம்.. இந்தியாவிடம் உதவி கேட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா! என்ன காரணம்
வார்த்தையை விட்ட வங்கதேச பிரதமர்: வங்கதேச பிரதமராக இருக்கும் ஹசீனா அவர்களை "ரசாகர்கள்" என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதனால் ஆளும் தரப்பைச் சேர்ந்த மற்ற கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் போராட்டக்காரர்களைத் தேச விரோதிகள் என்று சாடி வருகின்றனர். வங்கதேசத்தில் 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை ரசாகர்கள் என்று குறிப்பிடுவார்கள். அதை வைத்தே இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் மாணவர்களை வங்கதேச பிரதமர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஹசீனா, “சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரக்குழந்தைகளுக்குப் பலன் கிடைக்குமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வங்கதேசமே இப்போது பற்றி எரியும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications