தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி
யவத்மால்:புல்வாமாவில் தாக்குதல் நடத்தியவர்கள் எங்கு ஒளிந்து கொண்டாலும்.... அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கி உள்ளது. தாக்குதலை செய்தவர்கள் நிச்சயம் பழி தீர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு சூளுரைத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் யவத்மால் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
உங்களின் கோபம் புரிகிறது. நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. தீவிரவாதிகள் எங்கே பதுங்கி இருந்தாலும் இனிமேல் தப்பிக்க முடியாது.
ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனிமேல் ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள். தீவிரவாதிகள் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது. அவர்கள் எங்கே ஒளிந்துகொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications