சென்னையில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி.. பெங்களூர் மக்களுக்கு என்ன அவதி தெரியுமா?
Recommended Video
பெங்களூர்: வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் வெள்ளம் சேர்ந்துள்ள நிலையில், பெங்களூரில் வேறு வகை பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வட கிழக்கு பருவமழை தாக்கத்தால் சென்னையில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவு வரை இந்த மழை நீடித்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
மழையால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், பெங்களூரில் குளிர் தாக்கம் திடீரென அதிகரித்து மக்களை பாதிக்க வைத்துள்ளது.
மழை பெய்யும்
வழக்கமாக சென்னையில் அடை மழை பெய்ய தொடங்கினால், அதன் தாக்கம் பெங்களூர் வரை இருக்கும். காலையில் சென்னையில் மழை ஆரம்பித்தால், மாலை முதல் பெங்களூரிலும் அந்த மழையின் தாக்கம் எதிரொலித்து, லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யும். ஆனால் இம்முறை நிலைமை வேறு மாதிரி உள்ளது.
கடுமையான குளிர்
சென்னையில் மழை ஆரம்பித்ததுமே, பெங்களூரில் திடீரென தட்பவெப்பம் மாறி குளிர் வாட்ட தொடங்கிவிட்டது. அக்டோபர்29ம் தேதிவரை இருந்த வானிலை வேறு மாதிரியும், அக்டோபர் 30ம் தேதி வானிலை வேறு மாதிரியுமாக இருந்தது. அதாவது கடும் குளிர் திடீரென வாட்டத் தொடங்கியது.
வாடைக்காற்று
டிசம்பர் மாதத்தில் நிலவும் குளிரைப்போல இக்குளிர் இருந்தது. வாடைக்காற்றும் வீசியதால், ஸ்வெட்டர் உதவியுடன்தான் இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் குளிர் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தொடரும் ஜில், ஜில்
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, வளிமண்டல சுழற்சி காரணமாக குளிர் திடீரென அதிகரித்துவிட்டது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் போக்கு மாறியதுதான் இதற்கு காரணம். இன்னும் 2 தினங்களுக்கு குளிர் தொடரும் என கூறினர். நவம்பர் 2வது வாரத்திலிருந்து பெங்களூரில் குளிர்காலம் தொங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.