25 ஆண்டுகளுக்கு பின் மராட்டியத்தில் தமிழ் எம்.எல்.ஏ!: தீவிரவாத தாக்குதலின்போது பலரை காத்தவர்!
மும்பை: தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ள தமிழ்செல்வன் யார் என்பது குறித்த ஆர்வம் அனைத்து தரப்புக்குமே உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த தமிழ் செல்வன், பாஜக சார்பில் போட்டியிட்டு 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ளும் சிவசேனா கட்சியை சேர்ந்த வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட தமிழ்செல்வன் கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார்.
தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி கிராமம். உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் என்ற பதவியிலுள்ள தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறார்.
மும்பையின் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காயமடைந்து உயிருக்கு போராடிய 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்த இவரது சேவைக்காக, மாநில ஆளுநர் பாராட்டையும், விருதையும்பெற்றுள்ளார்.
தமிழ் செல்வன், 11ம் வகுப்பு பாஸ் ஆனவர். இவரது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 3 லட்சத்து 43 ஆயிரத்து 162 என்று அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின் பட்டியல் சொல்கிறது. கடன் மதிப்பு ரூ.20 லட்சம் என்றும் அதே ஆவணம் சொல்கிறது. அதே நேரம், கிரிமினல் வழக்குகள் எதுவும் பெண்டிங் கிடையாது.
மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர், பிரதிஷா நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகளும் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார கேடு ஏற்படுவது வழக்கம். எனவே அந்த தமிழ் மக்களுக்காக கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுக்கப்போவதாக வெற்ற பெற்ற பிறகு அளித்த பேட்டியில், தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
1980-90க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரசின் வி.சுப்பிரமணியன் என்பவர் மகாராஷ்டிர சட்டசபையின் தமிழ் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன்பிறகு, கால் நூற்றாண்டுக்கு பிறகு அந்த மாநிலத்தில் இருந்து ஒரு தமிழ் எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.