சிந்தியாவுக்கு எதிராக.. மாஜி பாஜக தலைவர்! ம.பியின் குணா தொகுதியில் பெரிதாக பிளான் போடும் காங்கிரஸ்
போபால்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் மத்தியப் பிரதேசம் மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர லோக்சபா தொகுதியான குணா குறித்து விரிவாக அலசுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக ஏப்ரல் 19 மற்றும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் குணா தொகுதி நட்சத்திர தொகுதியாக இருக்கிறது. இங்கு இந்த முறை பாஜக சார்பில் ஜோதிராதித்ய சிந்தியா களமிறக்கப்பட்டிருக்கிறார்.

தொகுதிக்கான பிரச்னை: இந்த தொகுதியில் ஏராளமான கரும்பு ஆலைகள் இருக்கின்றன. ஆனால், கரும்பு விளைச்சலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான சர்க்கரை ஆலைகள் கைவிடப்பட்டிருக்கின்றன. எனவே, கரும்பு விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும், இயங்கப்படாமல் உள்ள சர்க்கரை ஆலைகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். உள்ளூரில் உள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன இந்த தொகுதியின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த 2 தேர்தல்கள்: கடந்த 2019ம் ஆண்டு தேர்தலை பொறுத்த அளவில், அப்போதைய காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிராதித்ய சிந்தியா 1.25 லட்சம் வாக்குகளில் தோல்வியடைந்தார். பாஜக சார்பில் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்ட கிருஷ்ண பால் சிங் யாதவ் 6.14 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
2018 தேர்தல்: குணா தொகுதி ஜோதிராதித்ய சிந்தியாவின் குடும்ப தொகுதி என்றே சொல்லலாம். 1999ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவராவ் சிந்தியா இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு அவர் உயிரிழந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகன் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2024 தேர்தல்: இருப்பினும் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014 நடைபெற்ற தேர்தல் வரை அவர் வெற்றி பெற்றார். ஆனால் 2019ல் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனையடுத்து இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் சிந்தியா களமிறக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ராவ் யாத்வேந்திர சிங் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
இதில் டிவிஸ்ட் என்னவெனில், ராவ் யாத்வேந்திர சிங் கடந்த 2023ம் ஆண்டு வரை பாஜகவில் இருந்தார். பின்னர் காங்கிரஸில் இணைந்தார். இப்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராவார். அதேபோல சிந்தியா அரச குடும்பத்தை சேர்ந்தவராவார்.
வெற்றி வாய்ப்பு: வெற்றி வாய்ப்பை பொறுத்த அளவில், மத்தியப் பிரதேசம் முழுவதும் பாஜக மீண்டும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. எனவே குணா தொகுதியிலும் சிந்தியாதான் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த முறை மாநில கட்சிகளோடு காங்கிரஸ் கைகோர்த்துள்ள நிலையில், பாஜகவுக்கு வாக்குகள் ஓரளவு குறையும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications